சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார் பிறந்தநாள் இன்று!
தமிழ்நாட்டின் வடக்கெல்லை வேங்கடமலை என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெரும் பாடல்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி கோயிலுள்ள 38இல் 25 தமிழ் கல்வெட்டுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 1911இல் பிரித்தானியர் நிர்வாக வசதிக்காக வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து சித்தூரை தனியாகப் பிரித்தெடுத்தனர். இருமொழிப்பகுதிகளாக இருந்த சித்தூர் தெலுங்கரின் ஆதிக்கத்தால் மெல்ல மெல்ல தெலுங்குப்பகுதிகளாக மாற்றப்பட்டன.
1912இல் தெலுங்கர்களால் தொடங்கப்பட்ட விசாலா ஆந்திரா கோரிக்கை 1953இல் நீறுபூத்த நெருப்பாகியது. 'மதராஸ் மனதே' என்று பொட்டி சிறிராமுலு உண்ணாநிலைப் போர் நடத்தி மடிந்தார். அவரின் மரணம் தெலுங்கர்களை விழிக்க வைத்தது. பிரதமர் நேருவையோ நடுநடுங்க வைத்தது. ஆந்திரம் இனிமேல் முதல் தனிமாநிலம் என்று தாமதிக்காமல் அறிவித்தார் நேரு. இதனை தமிழ்ப்பகுதிகளில் இயக்கம் நடத்திக் கொண்டிருந்த காங்கிரசு பேரியக்கமும் திராவிட இயக்கமும் விரல் சூப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ஒரே ஒரு குரல் மட்டும் புதிய தமிழகம் படைத்திட தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்தது. அதன் பெயர் ம.பொ.சிவஞானம். அவர் மொழிவழி மாகாண கிளர்ச்சி வேண்டி 1946 முதலே தமிழ்முரசு ஏட்டில் எழுதி வந்தார். காங்கிரசில் இருந்து போராடி தோற்ற நிலையில் 'தமிழரசு கழகம்' எனும் அமைப்பை கட்சிக்குள் நிறுவினார்.
மொழிவழித் தாயகத்தை மீட்டெடுக்க 1949இல் வடக்கெல்லை பாதுகாப்புக்குழுவை உருவாக்கினார். தெலுங்கரின் 'மதராஸ் மனதே' முழக்கத்திற்கு பதிலடியாக, "தலையை கொடுத்தேனும் தலைநகர் காப்போம்" என்று போர்முரசம் கொட்டினார். அவரின் போராட்டத்திற்கு அன்றைய முதல்வர் இராசாசி துணை நின்றார். சென்னை தமிழர் வசமானது. அதற்கு ஈடாக வடவேங்கடம், திருத்தணிகை பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழர்கள் சத்தியாகிரகம், பொதுவேலை நிறுத்தம், இரயில் மறியல் என்று தொடர்ந்து வடக்கெல்லையில் போராட்டம் நடத்தினர். 3.7.1953 இல் திருத்தணிகையில் போராட்டம் நடத்திய ம.பொ.சி. கைது செய்யப்பட்டார். இராசாசி அரசு ஆறுவார காலம் சிறைத் தண்டனை வழங்கியது. மூன்றாண்டு காலம் தொடர் கிளர்ச்சி காரணமாக நேரு ஒரு முடிவுக்கு வந்தார். 1956ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகளை கண்டறிய உத்தரவிட்டார். அதற்கென நியமிக்கப்பட்ட படாஸ்கர் குழு 1957இல் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி 1. திருத்தணி வட்டத்தில் 290 கிராமங்கள், சித்தூரில் 29 கிராமங்கள், புத்தூரில் 320 கிராமங்களும், 417 சதுர மைல் நிலப்பரப்பும் தமிழகத்திற்கு கிடைத்தன. 2,39,502 மக்களும் தமிழகத்திற்குள் வந்தனர். வள்ளிமலை, திருவாலங்காடு, திருத்தணி, ஓசூர் பகுதிகள் நமக்கு கிடைத்தன. சித்தூர் நகரம், புத்தூர், நகரி, புதுப்பேட்டை, ஏகாம்பரக்குப்பம் பகுதிகள் நாம் இழந்தவைகளாயின. தெற்கெல்லையில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மலையாளிகளிடம் இருந்து மீட்க ம.பொ.சி. விரும்பினார். பொது வேலை நிறுத்தத்தை தமிழகம் முழுவதும் நடத்தினார். பலனில்லாமல் போனது. 1954இல் இராசாசிக்குப் பின் பொறுப்பேற்ற தமிழக முதல்வர் காமராசர் நேருவிற்கு காவடி தூக்கி ம.பொ.சி. நடத்திய போராட்டத்தை உதாசீனப்படுத்தினார். ஒருவேளை காங்கிரசிற்கு ம.பொ.சி. தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்தால் தாயக மீட்புப் போராட்டம் மிகப்பெரிய பாய்ச்சல் கண்டிருக்கும். 1956இல் காமராசரின் தன்னலப்போக்கும், திராவிட இயக்கத்தின் மொழிவழி அடையாள மறுப்பும் மிகப்பெரிய கேட்டை தமிழர் நிலத்தில் உருவாக்கி விட்டன. ம.பொ.சியின் பிற்கால அரசியல் கடும் திறனாய்விற்கு உரியவை என்ற போதிலும் அவரின் பங்களிப்புகள் தமிழ்த் தேசிய விடுதலை அரசியலுக்கு உரம் சேர்ப்பவைகள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!
நன்றி : கதிர் நிலவன்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு
விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.